காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நேற்று அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரத்தின் அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் மஙகள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து, தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.