பள்ளி மாணவி தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடி குறுக்கு வழியில் கட்சியை வளர்க்க பாஜ முயற்சி

திருச்சி, ஜன. 26: பள்ளி மாணவி தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடி குறுக்கு வழியில் கட்சியை வளர்க்க பாஜ முயற்சி செய்வதாக திருச்சியில் முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனித தன்மையற்றது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அதை ஏலம் விடப்போகிறோம் என அறிவித்துள்ளது. இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள்.

சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். படகுகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.கவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம். தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பா.ஜ.க வினர் இணைத்து வருகிறார்கள். பாதிப்பு என்றால் துடித்து போகும் மோடி தமிழ்நாட்டிற்கு பாதிப்பு என்றால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

Related Stories: