தஞ்சை, ஜன.26: தஞ்சை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தஞ்சை பைபாஸ் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் சாகுபடி பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் 5 ஏக்கர் நிலமும் பல ஆண்டுகளாக அரசு அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த நிலத்தை பறிமுதல் செய்து அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.