கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்றாவது வார முழுநேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்

புதுக்கோட்டை, ஜன.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தம், வர்த்தக வணிக நிறுவனங்கள் காய்கறி கடைகள் தேனீர் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய சாலைகள் காணப்பட்டது. வாடகை கார்களுக்கு அனுமதி வழங்கியதால் சில இடங்களில் வாடகை கார்கள் இயங்கின. மாவட்டம் முழுவதும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் அனைத்தும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கீழ ராஜவீதி, மேல ராஜ வீதி என புதுக்கோட்டை நகர் பகுதியில் வெறிச்சோடிக் கிடந்தது.

அதேபோல் வர்த்தக வணிக நிறுவனங்கள், தேனீர் கடை, காய்கறி சந்தைகள், பூ சந்தைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் பிரதான சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மருந்தகம், பால் விற்பனை நிலையம் உள்ளிட்டவைகளை மட்டும் வழக்கம் போல் செயல்பட்டது, மாவட்ட எல்லைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் 10 சோதனைச் சாவடிகள், 42 இடங்களில் வாகன தணிக்கை, 8 ஜீப், 22 இருசக்கர வாகனங்கள் என 30 வாகனங்களில் ரோந்து பணி என மாவட்டம் முழுவதும் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி அனாவசியமாக சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்தனர். வாகனங்களில் தேவையின்றி சுற்றியவர்களை போலீஸ்சார் கண்டித்தும் சில இடங்களில் அபராதம் விதித்தும் அனுப்பினர். நேற்று வாடகை டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தத்தால் சில இடங்களில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிந்தது.

கந்தர்வக்கோட்டை:

கந்தர்வகோட்டையில் தமிழக அரசின் உத்தரவின்படி நகர்ப்பகுதி முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு குறைந்த அளவே வெளி நோயாளிகள் அரசு நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்து சென்றனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒருசிலநபர்கள் பால் மற்றும் மருந்துகள் வாங்க வெளிப்பகுதிகளில் சுற்றிதிரிகின்றனர். அதேபோல பொன்னமராவதியில் அண்ணாசாலை, நாட்டுக்கல் மெயின் வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உணவகங்களில் உணவு பார்சல் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பால் மருந்து போன்றவை கிடைக்கின்றன. பொன்னமராவதி காவல்துறையினர் காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீசார் சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், திருவோணம் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தேவையின்றி வாகனங்களில் சென்றோரை தடுத்து நிறுத்தி எச்சசரித்து அனுப்பினர். மேலும், அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: