பழநி, ஜன. 21: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா கடந்த ஜன.12ம் தேதி துவங்கியது. தைப்பூச நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கடந்த 15 நாட்களில் பழநி நகருக்கு வந்து கிரிவலம் சென்று திரும்பினர். இந்நிலையில் பழநி வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பேரமைப்பின் கவுரவ தலைவர் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார். நகர தலைவர் ஜே.பி.சரவணன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் கவுரவ ஆலோசகர்கள் வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், செல்வம் ஸ்டோர் சம்பத், செயலாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.