சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவார பகுதியில், பாக்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, வெண்டாங்கி, நடுக்கோம்பை வாழவந்திகோம்பை, புளியங்காடு, தேர்புளிய மரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர். நடவு செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு, மரத்தில் பூ பிடித்து பாக்கு காய்கள் காப்புக்கு வரும். நடப்பாண்டு கொல்லிமலை அடிவாரப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால், பாக்கு மரங்களில் அதிக அளவிலான காப்புகள் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதும், இப்பகுதியில் பாக்கு அறுவடை பணிகள் நடைபெறும்.