விருத்தாசலம், ஜன. 6: விருத்தாசலம் அருகே குப்பநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்ததில் இருந்து இரண்டு தரப்பினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக விருத்தாசலம் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், கைது செய்வதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு சில மாதமாக எந்த பிரச்னையும் இல்லாத சூழ்நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக அப்பகுதியில் விருத்தாசலம் போலீசார் ரோந்தில் ஈடுபட்டு சிலரைப் பிடித்து வழக்கு பதிந்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் அப்பகுதிக்குச் சென்ற போலீசார் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என பலரை பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை விடுவிக்க செய்தனர்.