புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளில் யார் தவறு செய்திருந்தாலும் சிபிசிஐடி விசாரணை வேலூரில் அமைச்சர் துரைமுருகன் ேபட்டி

ேவலூர், ஜன.5: சரியான திட்டமிடல் இன்றி தனியார் சிலருக்காக தாறுமாறாக கட்டி உள்ள புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளில் யார் தவறு செய்திருந்தாலும் சிபிசிஐடி மூலம் விசாரிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் புதிய பஸ் நிலையத்தை பொறுத்தவரை முன்பகுதியும், பின்பகுதியும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கவேண்டும். இனிமேல், வாரந்தோறும் பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்வேன். பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் ‘பில் பாஸ்’ செய்யக்கூடாது. புதிய பஸ் நிலையத்திற்கு கொரோனா வந்தது போன்று காணப்படுகிறது. மற்ற மாநகரங்களில் எல்லாம் பஸ் நிலைய ‘ஆர்ச்’ அழகாக இருக்கும். ஆனால் வேலூரில் மட்டும் தாறுமாறாக இருக்கிறது. சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம். பஸ்நிலையம் தாழ்வாக உள்ளது. தனியார் சிலருக்காக இப்படி கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இவை அனைத்திலும் மாற்றம் செய்து பஸ் நிலையப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ்நிலைய பணிகளில் ஆதி முதல் மேற்கொண்ட பணிகளில் இருந்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வரிடம் தெரிவித்து சிபிசிஐடி மூலம் விசாரிக்கப்படும். காட்பாடியில் இருந்து வேலூர் வரும் சாலையில் கிரீன்சர்க்கிள் பகுதியில் சிறிய அளவில் உள்ள பூங்காவை அகற்றி கூடுதல் வழி ஏற்படுத்தலாம். இதன்மூலம் சென்னையில் இருந்து கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வரும் வாகனம் எளிதில் யூ டர்ன் போட்டு செல்லலாம். கிரீன்சர்க்கிள் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து சில டீக்கடைகள் உள்ளன. அதனை அகற்ற எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். அனுமதியின்றி இயங்கும் கல் குவாரிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எஸ்பி ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமுலுவிஜயன், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், செயற்பொறியாளர் கண்ணன், கட்டிட ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: