பெரியகுளம், ஜன. 1: பெரியகுளத்தில், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி, கள்ளிப்பட்டி, கீழவடகரை, சருத்துப்பட்டி. எண்டப்புளி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த வீடு இல்லாத பொதுமக்கள் 600 பேருக்கு பட்டா வழங்கக் கோரி, கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி, ஏழைகளுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.