வல்லம், டிச.21: காவிரி டெல்டா பகுதியில் அதிகளவு பெய்த பருவ மழையிலிருந்து பயிர்களை காப்பாற்றி உரம் தெளிப்பு, களையெடுப்பு உட்பட பல பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை மானிய விலையில் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் தர்ம.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து பெய்த தொடர் கனமழையால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மத்திய குழுவினர் வந்து பாதிப்பு இடங்களை பார்வையிட்டனர். இதற்கிடையில் வயல்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் வெளியேற்றினர்.