அறந்தாங்கியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு

அறந்தாங்கி, டிச.17: அறந்தாங்கியில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்ததையடுத்து அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவா(30). அறந்தாங்கியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரும் அரசர்குளம் தென்பாதியைச் சேர்ந்த சத்யா(27) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். இந்த நிலையில் மனைவி சத்யாவின் நடத்தை மீது தேவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி தேவாவிற்கும், சத்யாவிற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா அரசர்குளம் தென்பாதியில் உள்ள தனது தந்தை விஜயகுமார் வீட்டிற்கு சென்றுவிட்டார். உடனே விஜயகுமார் மகளை சமாதானம் செய்து, அன்றைய தினமே கணவர் தேவா வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சத்யா தேவா வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாக கூறப்படுகிறது. மகள் சத்யா இறந்த தகவல் அறிந்து வந்த விஜயகுமார், தனது மகள் சத்யாவை அவரது கணவர் தேவா குடும்பத்தினர் சாந்தி, கார்த்திக் மற்றும் உமா ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டதாக அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார். அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தேவா உள்ளிட்ட 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் சத்யாவின் சடலத்தை நேற்று தடயஅறிவியல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: