வேப்பூர், டிச. 15: வேப்பூர் வட்டம் மங்களூரில் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் (59), அவரது மகன் சங்கரன் (37) ஆகியோர் நகை மதிப்பீட்டாளர்களாக உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் மேலாளராக உள்ளார். இவர் உடல் நலக்குறைவால் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நகை மதிப்பீட்டாளர்கள் சேர்ந்து, நகைக்கடன் பெற்று வட்டி கட்ட வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் வரவு வைக்காமல் பணம் பெற்றுக்கொண்டதற்கு போலி ரசீது போட்டுக்கொடுத்து மோசடி செய்துள்ளனர். அதேபோல நகையை மீட்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் கூட்டமாக இருப்பதாகவும், வங்கி மேலாளர் விடுமுறையில் உள்ளார் என பல்வேறு காரணங்களை கூறி, பின்னர் வந்து நகையை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நகை மீட்பதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு கையெழுத்து இல்லாத போலி ரசீது வழங்கி வந்துள்ளனர்.