விருத்தாசலம், டிச. 10: கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசனின் மனைவி பவானி(55). இவர்களுக்கு கவிதா, கனிமொழி, கலையரசி, சிந்துஜா என்ற நான்கு மகள்களும், வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர். அமைச்சர் சி.வெ.கணேசன் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தில்லை நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணியளவில் அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து விருத்தாசலம் தில்லைநகரில் உள்ள அமைச்சர் சி.வெ.கணேசன் இல்லத்தில் பவானி அம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, முத்துசாமி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மா சுப்ரமணியன், செஞ்சி மஸ்தான், சிவசங்கரன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழர் நீதிக் கட்சி தலைவர் சுபா இளவரசன், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன், ஐயப்பன், வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், கண்ணன், காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சரின் தம்பியும் எழுத்தாளருமான இமையம், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், பாண்டியன் ,விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், நகர அதிமுக செயலாளர் சந்திரகுமார், தொகுதி செயலாளர் அருளழகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.