தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதை டூவீலரால் ஆக்கிரமிப்பு

தஞ்சாவூர், ஜுன் 9: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாய்தளப்பாதை மற்றும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக நிறுத்தி வைப்பதால், சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் வருபவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை போன்றவற்றிற்கு மனு கொடுக்க வரும்போது, வாகனங்களை அகற்ற சொல்லி கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது.

உதவிக்கு ஆள் இல்லாவிட்டால் திரும்பி செல்லும் பரிதாபமும் நடக்கிறது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்; மாதந்தோறும் உதவித்தொகை வாங்க கலெக்டர் ஆபீஸ் வருகிறோம். ஆனால், தங்களுக்கான பாதையில் வாசலில் வண்டியை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். செக்யூரிட்டி கிட்ட சொன்னாலும் யார் வண்டின்னு தெரியலனு சொல்றாங்க. சக்கர நாற்காலியை தூக்கமுடியாமல் தவிக்கிறோம் என்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் பாதை தொடங்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் சுற்றளவுக்குள் மாற்றுத்திறனாளிகள் பாதை, வாகனம் நிறுத்த தடை என பெரிய பதாகை வைக்க வேண்டும். வாகனங்களை முறைப்படுத்தி, மாற்றுத்திறனாளி பாதையில் வண்டி நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: