விளாத்திகுளம், டிச. 7: தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டை அணை நிரம்பியது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விளாத்திகுளம் வைப்பாற்றிற்கு நேற்று முன்தினம் மாலை முதல் நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் விளாத்திகுளம் பழைய பாலத்தின் மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. நேற்று காலை நீர்வரத்து சற்று குறைந்தது. இதனிடையே வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட நீரானது வெம்பகோட்டை, சூலூர் சந்தை இருக்கன்குடி, சாத்தூர், நென்மேனி, முத்துலாபுரம், ஆற்றங்கரை அணைக்கட்டு, சித்தநாயக்கன்பட்டி வழியாக விளாத்திகுளத்திற்கு நேற்று மாலை வெள்ளமாக வந்தடைந்தது.