புதுக்கோட்டை, டிச.6: புதுக்கோட்டை வட்டாரம் எம்.குளவாய்பட்டி, மூக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான மண்வளதின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி விவசாயிகளை வரவேற்று, இயற்கையாகவே மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் சாகுபடிக்கு முன் நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5டன் வீதம் இட்டு சாகுபடி மேற்கொள்ளலாம். மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ராசாய உரம் பயன்பாடுகளின் அளவை குறைத்து மண்வளத்தை மேம்படுத்தலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் தலைமை தாங்கினார். சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்களான கொளஞ்சி, தக்கை பூண்டு, சணப்பு ஆகியவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து மண்வளத்தை காக்க வேண்டும்.