மண் வளத்தை மேம்படுத்த மக்கிய தொழு உரமிட்டு சாகுபடி செய்யலாம் விழிப்புணர்வு முகாமில் தகவல்

புதுக்கோட்டை, டிச.6: புதுக்கோட்டை வட்டாரம் எம்.குளவாய்பட்டி, மூக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான மண்வளதின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி விவசாயிகளை வரவேற்று, இயற்கையாகவே மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் சாகுபடிக்கு முன் நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5டன் வீதம் இட்டு சாகுபடி மேற்கொள்ளலாம். மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ராசாய உரம் பயன்பாடுகளின் அளவை குறைத்து மண்வளத்தை மேம்படுத்தலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் தலைமை தாங்கினார். சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்களான கொளஞ்சி, தக்கை பூண்டு, சணப்பு ஆகியவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து மண்வளத்தை காக்க வேண்டும்.

மேலும் பசுந்தழை உரங்களான எருக்கு, செஸ்பேனியா, அகத்தி, வேம்பு, பூவரசு, புங்கன் ஆகிய பசுந்தழை இழைகளை சாகுபடிக்கு முன் வயலில் இட்டு உழவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுபாடு மதியழகன் விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு முன் மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்றார். வேளாண்மை அலுவலர் கருப்பையா, வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கமலி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, பயிர் காப்பீட்டு திட்ட அலுவலர் வசந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: