காரைக்கால், டிச.4: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலய ஊழியர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் திருநள்ளாறு எம்எல்ஏ சிவாவிற்கு கௌரவ தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் சனிபகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலசங்கத்தின் பொறுப்பாளர்கள் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கந்தபழனி வேல், செயலாளராக செந்தில்குமார், பொருளாளர் சுப்பையன், ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் மேலும் பல ஊழியர்கள் பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய ஊழியர்கள் நல சங்கத்தின் புதிய கௌரவ தலைவராக திருநள்ளாறு எம்எல்ஏ சிவா பொறுப்பேற்றார். பின்னர் கொரோனா தாக்கம் குறைந்து சகஜ நிலை தொடர்வதால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கை மனுவினை சட்டமன்ற உறுப்பினர் சிவாவிடம் ஊழியர்கள் வழங்கினர்.