திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைகால்

திருவாரூர், டிச.2: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை மாற்றுத்திறனாளிகளுக்கு டீன் ஜோசப்ராஜ் வழங்கினார். உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுதுறை சார்பில் 13 பேருக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு செயற்கை கால்களை மருத்துவக் கல்லூரி டீன் ஜோசப் ராஜ் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில்,தற்போது கொரோனா 3வது அலை போன்று ஏதாவது வருவதாக இருந்தாலும் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே எப்படிப்பட்ட அலைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து முன்னேற்பாடு பணிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்று செயற்கை கால்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகி பயன் பெறலாம் என்றார். நிகழ்ச்சியில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை பேராசிரியர் திருச்செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: