ராஜபாளையம் அருகே திமுக கவுன்சிலரை கொலை செய்த 3 வாலிபர்கள் கைது

ராஜபாளையம், ஏப். 16: ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன், திமுக ஒன்றிய கவுன்சிலரான இவர், கிருஷ்ணாபுரம் தெப்பகுளம் அருகே நேற்று முன்தினம் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். டிஎஸ்பி நாகஷங்கர் தலைமையில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர். விசாரணையில், அண்ணாமலை ஈஸ்வரன் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அப்பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏற்பட்ட பிரச்னையில் தாமரைக்கனி என்ற வாலிபர் கடந்த ஆண்டு ஏப்.7ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் உள்பட 6 ேபர் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் 6 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த அண்ணாமலை ஈஸ்வரன் நாகர்கோவிலில் தங்கியிருந்தார்.

அவரை எதிர்தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்படி வந்தவரை தாமரைக்கனியின் நண்பர்களான குழந்தைவேல் குமார்(22), மதியழகுராஜா(26), ஜெகதீஸ்வரன் (22) ஆகியோர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: