சேந்தமங்கலம், ஏப்.16: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பழனிவேல் தலைமையிலான குழுவினர், கடந்த 9ம் தேதி ஒரு வேனில் கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். வேனை திருக்கழுக்குன்றத்தைச சேர்ந்த டெல்லிபாபு(25) ஓட்டி வந்தார். மறுநாள்(10ம் தேதி) மதியம் எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். கொல்லிமலை பிரதான மலைப்பாதையில், 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 25 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த தம்பிரான் மகனும், கூலி தொழிலாளியுமான பிர்லா(30) என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்.