தலைமறைவான 2 பேர் பெங்களூருவில் பதுங்கல்

தேன்கனிக்கோட்டை, ஏப்.16: தளி அருகே ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நரேஷ்(28). பிரபல ரவுடியான இவர், கடந்த 12ம் தேதி இரவு 7.30 மணிக்கு தளியில் உள்ள உருதுபள்ளி முன்புள்ள சிக்கன் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.  இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், வெட்டி கொல்லப்பட்ட நரேஷ் மீது தேன்கனிக்கோட்டை போலீசில் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நரேஷ் மனைவி சுமித்ரா(23) தளி போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், தளி ஜெயந்தி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மகன் பதி(எ) லட்சுமிபதி(26), அதே பகுதியைச் சேர்ந்த ஹாசிக்(23) ஆகியோர் நரேஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு, ஆனேக்கல் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு லட்சுமிபதி, ஹாசிக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: