நெல்லை, ஏப். 14: கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க தடை விதித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 200க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று பரவியது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களாக முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முக கவசம் இன்றி பலர் வெளியில் உலா வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறுவதால் பல்வேறு தடைகள் விதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நெல்லையை பொறுத்தவரை தாமிரபரணி ஆறு புனித நதியாக கருதப்படுகிறது. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி 130 கிமீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.