திருப்பூர், ஏப். 14: மத்திய அரசு நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி குழுக் கூட்டம், ஊத்துக்குளி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னச்சாமி பங்கேற்று, மாநில நிர்வாகக் குழு முடிவுகள் குறித்து பேசினார். பொருளாளர் நடராஜன், சங்க பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருப்பூர் மாவட்டம் தொழிலாளர் நிறைந்த மாவட்டம். நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தொற்றைத் தடுக்க, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை, தொழிற்சாலைகள் உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தொற்றை தடுக்க, பனியன், பஞ்சாலை, உணவகம், ஜவுளி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.