தூத்துக்குடி,ஏப்.13: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 2647 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5,29,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் தூத்துக்குடி நகர பகுதியில் பொது இடங்களில் முககவசம் அணியாத 603 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 259 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 504 பேர் மீதும், வைகுண்டம் உட்கோட்டத்தில் 190 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 260 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 363 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 345 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 123 பேர் மீதும் என மொத்தம் 2647 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 5,29,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.