ஊட்டி,ஏப்.10: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் லேசான பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கோவிட் கேர் மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 40க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த சூழலில் தற்போது கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.