கோவில்பட்டி, ஏப். 10: கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள அமலை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அருகே மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கோவில்பட்டி நகரில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர் வந்து சேரும். மேலும் இனாம்மணியாச்சி கிராமத்தில் இருந்து இந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் வழியாகவும் இந்த கண்மாய்க்கு மழைநீர் வந்து தேங்கும். இக்கண்மாயில் தேங்கும் மழைநீரை, மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் நெல், கத்தரி, வெங்காயம், மிளகாய், தக்காளி போன்ற பயிர்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் மணல் மேடுகளாக காட்சியளித்தது. இதனால் மழை காலங்களில் போதிய தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.