லாரி கவிழ்ந்து விபத்து மீன் வியாபாரி பரிதாப பலி

பொன்னேரி, ஏப். 10: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு கரையான் தெருவைச் சேர்ந்த அப்துல் சமது மகன் அக்ரம் (28). இவரது தம்பி அக்பர் (26). இவர்கள் மீன் ஏற்றுமதி தொழில் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று மினி லாரியில் மீன் மற்றும் ஐஸ் கட்டிகளை எற்றிக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் நோக்கிச் சென்றனர். திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த லோகநாதன் (36) என்பவர் மினிலாரியை ஓட்டினார். பொன்னேரி அருகே காவல்பட்டி என்ற இடத்தில் செல்லும்போது ஆடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் லோகநாதன் பிரேக் போட்டார். அப்போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மினி லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் லாரியில் பயணம் செய்த அக்ரம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தம்பி அக்பர், பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த அக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அக்பரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயம் அடைந்த டிரைவர் லோகநாதன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: