திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு

உடுமலை,ஏப்.9: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி  அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் கடைசியாக இந்த அணை உள்ளது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் உடுமலை நகருக்கும், 5 கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலம் கிராமப்பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. தற்போது 3-வது மண்டல பாசன பகுதிக்கு 6-வது சுற்று தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் வெளியேற்றம் காரணமாகவும், கடும் வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையில் நேற்று நீர்மட்டம் 33.31 அடியாக இருந்தது. அணைக்கு 862 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 1137 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் குறைந்துள்ளதால், அணையின் பெரும்பகுதி மண்தரையாக காட்சி அளிக்கிறது.

Related Stories: