செய்யூர், ஏப். 8: செய்யூர் அடுத்து எல்லையம்மன் கோயில் ஈசிஆர் சாலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
செய்யூரில் இருந்து கடப்பாக்கம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் பகுதி உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் தினமும் ஏராளமான பயணிகள் காத்திருந்து பஸ்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள சாலை, குறுகிய வளைவு கொண்டதாலும், பஸ் பயணிகள் சாலையோரம் ஆபத்தான நிலையில் நிற்பதால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கந்த ஆண்டு போலீசார் சார்பில், சாலையின் இருபுறமும் நான்கு பேரிகார்டுகள் அமைத்தனர்.