தூத்துக்குடியில் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி,ஏப்.8: தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி சிக்கியது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி புறநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஒரு மினி லாரியில் சிலர் அரிசி மூடைகளை ற்றிக்கொண்டிருந்தனர்.  போலீசார் அந்த லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த அரிசி மூடைகளை சோதனையிட்டபோது அவை ரேஷன் அரிசி என்பதும் அதனை அவர்கள் கடத்தி செல்வதும் தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கி, பதுக்கி வைத்து குமரி மாவட்டத்திற்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரி மற்றும் குடோனில் இருந்த சுமார் 10 டன் எடையிலான ரேஷன் அரிசியையும் மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் லாரியின் டிரைவரான குமரிமாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த அனீஸ்(26) என்பவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Related Stories: