பெரம்பலூர்,ஏப்.5: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்தார்.சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை (6ம் தேதி) நடைபெற உள்ளதையொட்டி பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையத்தையும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் (தனி) தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பெரம்பலூர் (தனி) தொகுதியில் 165 இடங்களில் 428 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 3,02,692 வாக்காளர்கள் வாக்களிக்கவும், குன்னம் தொகுதியில் 177 இடங்களில் 388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 2,73,461 வாக்காளர்கள் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் (தனி) தொகுதிக்கு குரும்பலூர் அரசு கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கு வேப்பூர் அரசு கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.