ஊட்டி,ஏப்.4: குன்னூரில் அரசு கலைக்கல்லூரி ஒன்று அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குன்னூர் சட்டமன்ற தொகுதி திமுக., வேட்பாளர் ராமசந்திரன் பொதுமக்களிடையே வாக்குறுதி அளித்தார்.குன்னூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் நகரம், குன்னூர் ஒன்றியம், மேலூர் ஒன்றியம், கீழ்கோத்தகிரி, கோத்தகிரி ஆகிய ஒன்றிய பகுதிகளிலும் நகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.நேற்று மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தூதூர்மட்டம், கொலக்கொம்பை. உட்லேண்ட்ஸ், முசுாபரி, தைமலை, கோட்டக்கல். மஞ்சக்கொம்பை, மேலூர், அறைஹட்டி, மீன் மலை போன்ற பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் பேசுகையில், திமுக., அரசு எப்போதும் மக்களுக்கான அரசாகவே இருந்துள்ளது. ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை காக்கும் வகையில், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.30 பெற்றுத் தர நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.