தேனி, ஏப். 2: போடி தொகுதிக்குட்பட்ட பூதிப்புரம், பழனிசெட்டி மற்றும் தேனியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அதிமுக தொண்டர்களுக்கு, அதிகாலையிலேயே கட்சிக்காரர்கள் மது விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தபோதும் தேர்தலின்போது, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தொகுதியில் வாக்குகேட்டு செல்லும்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓபிஎஸ் வாக்கு கேட்டு செல்லும் பகுதிகளுக்கு ரூ.500 கொடுத்து ஆட்களை திரட்டி செல்லும் நிலை உள்ளது. இருந்தபோதும் வாக்கு கேட்டுச் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், அடிப்படை வசதிகள் செய்யாதது குறித்தும் கேள்விகளை கேட்டு ஓபிஎஸ்சை தெறிக்கவிடுகின்றனர்.