பேராவூரணி நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

பேராவூரணி, ஏப்.2: பேராவூரணி நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.பேராவூரணி நகர் செல்வவிநாயகர் கோவில்பகுதியில் நேற்று காலை பிரசாரத்தை துவக்கிய அசோக்குமார் ஆண்டவன் கோவில், பாந்தகுளம், அண்ணா நகர், ஆத்தாளூர், நாட்டாணிக்கோட்டை, முடப்புளிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் கிழக்குதெரு, சிதம்பரம் சாலை, பொன்காடு, மாவடு குறிச்சி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு வீதியிலும் திரளான ஆண்களும் பெண்களும் கூடி உற்சாக வரவேற்பு அளித்து எங்கள் வாக்கு உதயசூரியனுக்குதான் என உறுதி அளித்தனர்.

பொதுமக்களிடையே அசோக்குமார் பேசியது, பேராவூரணி பேரூராட்சியின் தலைவராக இரண்டுமுறை தொடர்ந்து பத்தாண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் இங்குள்ள ஒவ்வொருவரை பற்றியும், ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும், எனக்கு நன்றாக தெரியும். நான் வெற்றி பெற்றால் பேராவூரணி நகரில் அனைத்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வேட்பாளருடன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப. சேகர், முன்னாள் கவுன்சிலர் முகமதுபாரூக், நகரச்செயலாளர் நீலகண்டன், மற்றும் வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: