கோவை, மார்ச் 31: கோவை வடக்கு தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் வடவள்ளி பேருந்து முனையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எனது பரம்பரை சொத்து மதிப்பு என்ன? என்று தேர்தல் அலுவலகத்தில் கொடுத்து உள்ளேன். கடந்த 4 வருடத்தில் திடீர் பணக்காரன் ஆனவன் கிடையாது. வடவள்ளியில் 5 ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகாலம் வளர்ச்சியை கொடுத்து உள்ளோம் என்று பேசி வருகின்றனர். உங்களது 5 தலைமுறைக்கு மட்டும் சொத்து சேர்த்து வைத்து உள்ளீர்கள். என்ன தொழில் செய்தீர்கள் இவ்வாறு சொத்து சேர்க்க. 45 ஆண்டு கால என் அரசியல் பயணம். உங்களுடைய வயது என் அனுபவம். பரிசு பொருட்கள் கொடுப்பவர்கள் நேர்மையாக வந்த பணத்தில் கொடுக்க மாட்டார்கள். கொரோனா காலத்தில் வடவள்ளியில் 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய மதுவை 1000 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்று காசு பார்த்தவர்கள் இங்கு உண்டு. ரேஷன் கடை அரிசியை திருடி அதில் அன்னதானம் வழங்கியது இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும்.