சென்னை, மார்ச் 31: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். மேலும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்(தெற்கு) இரண்டாவது தெருவில், அதிமுக கட்சியை சேர்ந்த சிலர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, ஒரு வாக்குக்கு தலா ₹ 500 கொடுப்பதாக, அப்பகுதியை சேர்ந்த திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திமுகவினர் அங்கு விரைந்து சென்று, பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருந்த, அதிமுகவினர் 4 பேரை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, 2 பேர் தப்பியோடினர். 2 பேர் பிடிபட்டனர். இது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளுக்கும், நீலாங்கரை போலீசாருக்கும் திமுகவினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் பணம் பட்டுவாடா செய்த, அசோக், சூர்யா ஆகிய இருவரை நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.