பொன்னேரி, மார்ச் 31: பொன்னேரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் நேற்று திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்வசேகரன், ஆரணி பேரூர் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது, வேட்பாளர் துரை சந்திரசேகரனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து இருபுறங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வேட்பாளர் துரை சந்திரசேகர் பேசியதாவது, “தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனைத்து மக்களின் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளது. என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். நான் வெற்றி பெற்றால் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் ஆரணி நகர பகுதிகளில் சமுதாயக்கூடம், கழிப்பிட கட்டிடம், ஓய்வுதியம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வேலைகளை செய்து தருவேன்,” என்று உறுதியளித்தார்.