ஆவடி, மார்ச் 30: ஆவடி தொகுதி திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3,4,5 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆவடி வடக்கு நகர செயலாளர் ஜி.நாராயணபிரசாத் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து அழைத்து சென்றனர். அப்போது, வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது, “ராஜிவ்காந்தி நகர், கலைஞர் நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினந்தோறும் லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜிவ்காந்தி நகர் உள்ள சுடுகாட்டில் எரிமேடை, மின்விளக்கு, தண்ணீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். கோவில்பதாகையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவேன். அங்கு சமுதாயக்கூடம் கட்டிக் கொடுப்பேன். கோவில்பாதாகை ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவேன். அங்குள்ள கரைகளை சீரமைத்து நடைபாதை அமைத்து கொடுப்பேன். மேற்கண்ட பகுதிகளில், பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வருவேன்,”என்றார்.