புதுக்கோட்டை, மார்ச் 26: தண்ணீர் சிக்கனம் மற்றும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மேலப்பட்டி கிராம அறிவு மையம் இணைந்து ஏற்பாடு செய்த தண்ணீர் சிக்கனம் மற்றும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இலுப்பூர் அருகே மேலப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
தண்ணீர் மற்றும் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. தண்ணீரும் மனித குலத்தின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பதால் நீருக்கு கொடுக்கப்படும் விலையைவிட அதன் மதிப்பு மிகவும் உயர்வானது. இதனை மறந்தால் நாம் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்த ஆண்டு உலக தண்ணீர்தின செய்தியில் ஐ நா எச்சரித்துள்ளது. நிலத்தடி நீர் தான் நீரின் மிகமுக்கிய ஆதாரமாக உள்ளது.