ஆவடி, மார்ச் 24: ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உள்ளிட்ட 26 முதல் 30 வரையிலான வார்டுகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், அவருக்கு ஆவடி தெற்கு நகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது, திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது, “ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் இரு புறமும் உள்ள கால்வாயை தூர்வாரி சாலை சீரமைக்கப்படும். அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாத ஏழை, எளியோருக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். விளிஞ்சம்பாக்கம் ஏரியிலிருந்து பருத்திப்பட்டு செல்லும் உபரி நீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்கப்படும். காமராஜர் நகரில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டி கொடுத்து, ஆய்வகம், கம்பியூட்டர் வகுப்புகள் உள்ளிட்டவை நவீனப்படுத்தப்படும். நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, கூடுதலாக படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அங்குள்ள அனைத்து மழைநீர் கால்வாய்களை புதிதாகக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சலவைத்தொழிலாளர்களுக்கு சலவைத்துறை கட்டி கொடுக்க ஆவன செய்வேன். எனவே, நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்,” இவ்வாறு அவர் பேசினார்.