சென்னை, மார்ச் 24: கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா பணியில் இருந்த மயிலாப்பூர் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி (50). தமிழக காவல் துறையில் கடந்த 1993ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது மாநகர காவல் துறையில் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி சசிரேகா, தமிழ்செல்வன் (20), பிரபு (17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பாலாஜி சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காவல் துறையில் யாரும் தேவையின்றி விடுப்பு எடுக்க கூடாது என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இதனால், நோய் காரணமாக பாலாஜி விடுப்பு எடுக்க முடியாத நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், குடும்பத்திலும் சில பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 6.30 மணிக்கு பணிக்கு வந்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அவருக்கு கோயில் அருகே பணி வழங்கப்பட்டிருந்ததது. பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு 11 மணிக்கு மிகவும் சோர்வாக சென்றுள்ளார்.