நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் அரசு கலைக்கல்லூரியில் உலக நுகர்வோர் தினவிழா

சேலம், மார்ச் 23:சேலம் வின்சென்டில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில், நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில், உலக நுகர்வோர் தின விழா நடந்தது. இதனை முன்னிட்டு நடந்த கண்காட்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசுக்கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் செல்வரங்கம், துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் சுரேஷ் பாபு வரவேற்றார். இதில், நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் பூபதி, கலந்து கொண்டு, நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கதிரவன் கலந்து கொண்டு, உணவு பாதுகாப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், உணவு கலப்படம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் நன்றி தெரிவித்தார்.  

Related Stories: