ஆசிர்வதிப்பதுபோல் நடித்து பெண்ணிடம் பணம் அபேஸ்: திருநங்கைக்கு வலை

ஆவடி, மார்ச் 23: பங்க் ஊழியரிடம் ஆசீர்வதிப்பதுபோல் ₹7 ஆயிரத்தை திருடிய திருநங்கையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவேற்காடு ராஜரத்தினம் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் தேவி(32). ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை கோவர்த்தணகிரி மாருதி அவென்யூவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேவி பணியில் இருந்தார்.அப்போது 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை அங்கு வந்தார். தேவிக்கு ஆசிர்வாதம் செய்துள்ளார். மேலும் அவர் பணப்பையையும் வாங்கி ஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து தேவி பணப்பையை சரிபார்த்தார். அதில் இருந்த ₹7 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தேவி, பங்க் அதிகாரியுடன் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தார். திருநங்கை பணப்பையில் இருந்து பணத்தை நைசாக திருடியது தெரியவந்தது.இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய திருநங்கையை தேடுகின்றனர்.

Related Stories: