தக்கலை, மார்ச் 22: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ நேற்று திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் பி.டி.எஸ்.மணி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜெயன், இ.கம்யூ வட்டார செயலாளர் ராஜு ஆகியோர் பேசினர். முன்னாள் எம்பி பெல்லார்மின் தொடங்கி வைத்தார். இதில் திமுக நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த ஜார்ஜ், ஜாண்பிரைட், ஜாண்சன், மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் வாக்கு கேட்டு மனோதங்கராஜ் பேசியதாவது:இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த தேர்தல் ஒரு வெற்றி தேர்தல். நமது தலைவர் நமது மாவட்டத்துக்கு வந்து தக்கலையில் பேசினார். அது கூட்டப்பட்ட கூட்டமல்ல. தானாக கூடிய கூட்டம். பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் கேஸ் விலை ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலை சாமானியனை எப்படி பாதித்திருக்கிறது என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். நாம் எப்படி இந்த அரசை துாக்கி எறிய வேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே ஏழை, எளிய மக்களும் நினைத்து கொண்டுள்ளனர். வெற்றி தேர்தல் என சும்மா இருந்து விடக்கூடாது. இந்த அரசை வீழ்த்தியாக வேண்டும். வீரத்தை தேர்தலில் காட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ெதாடர்ந்து தென்கரை, கல்குறிச்சி, திக்கணங்கோடு ஊராட்சி பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது மனோதங்கராஜ் எம்.எல்.ஏ பேசியதாவது: குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இங்கு பாஜவின் தந்திரங்கள் பலிக்கவில்லை. மாநில உரிமைகள் பறிபோகாமல் இருக்க மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மக்களை பற்றி மத்திய மாநில அரசுகள் கவலைப்பட வில்லை. பாஜ வின் செயல்பாடுகள் பொருளாதார சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வலுவான சக்தியாக வளர்ந்துள்ளது. இங்கு இரண்டு முறை வெற்றிபெற்றும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவோம் என்று கூறி வந்த பொன்.ராதாகிருஷ்ணன் கடைசி வரை அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றினார். அதிமுக, பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். மீண்டும் பத்மநாபபுரம் மக்களின் குரலாய் ஒலிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.