திருச்சி, மார்ச் 20: திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கேகே நகரில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பட்டாவுடன் கூடிய வீட்டு வசதி ஏற்படுத்தி தருவேன் என்று உறுதியளித்தார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அனைத்து வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று காலை வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 38வது வார்டு கே.கே.நகர் பகுதியில் வியாசர் தெருவில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் இனிகோ இருதயராஜிக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.