மண்ணச்சநல்லூர், மார்ச் 20: மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் நேற்று பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதியில் மாட்டு வண்டியில் சென்று விவசாயிகளிடம் தீவிர பிரசாரம் செய்தார். மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பிச்சாண்டார்கோவில், கூத்தூர், வெங்கங்குடி, இனாம்கல்பாளையம், இனாம்சமயபுரம், இருங்களுர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆட்சி காலத்தில் ஒரே கையெழுத்தில் பல ஆயிரம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் தந்தவர் கலைஞர். கலைஞரின் வழியில் திமுக தலைவர் ஸ்டாலினும் தற்போது விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள அறிவித்து உள்ளார். அதேபோல் வீடுகளில் மாதம்தோறும் மின்கட்டணம் கட்டும் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.