திருச்சுழி, மார்ச் 19: திருச்சுழி அருகே உபரிநீர் வரும் வரத்து கால்வாய் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காததால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சுழி அருகே உள்ளது மைலி கிராமம். இங்குள்ள கண்மாய்க்கு கீழ் இடையாங்குளம் கண்மாய் நிரம்பி கால்வாய் மூலம் உபரிநீர் வரும். இதற்கு கீழ் இடையாங்குளம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மைலி கிராம கண்மாய்க்கு உபரிநீர் வருவதை தடுத்து நிறுத்தினர். கடந்த வருடம் அதிகாரிகள் சர்வே நடத்தி சரியாக உள்ளதாக கூறி, அடைக்கப்பட்டிருந்த உபரி நீர் வரும் கால்வாயை சீரமைத்து கொடுத்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் நிரம்பி உபரி நீரை திறப்பதற்காக சென்றனர். அப்போது இரு கிராமத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது வருவாய் துறை அதிகாரிகள், கீழ் இடையாங்குளம் கிராமத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர், ஆகையால் திறக்க இயலாது என கூறினர். இதற்கு மைலி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ரேஷன் கார்டுகளை திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.