கீழ்பென்னாத்தூர், மார்ச் 19: கீழ்பென்னாத்தூரில் நகைக்கடை ஊழியர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற, 40 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயப்பிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், சுமார் 40 சவரன் (318 கிராம்) புதிய தங்க நகைகள் இருந்தது.
விசாரணையில், நகைகளை எடுத்து வந்தவர் கீழ்பென்னாத்தூர் அடுத்த அவலூர்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பதும், அங்குள்ள நகைக்கடையில் வேலை செய்வதும், சென்னையில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட நகைகளை தங்களது கடைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.மேலும், கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு செல்லும் பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், கார்த்திகேயனிடம் அவர் கொண்டு சென்ற நகைகளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர், அந்த நகைகளை கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் தனபாலிடம் ஒப்படைத்தனர். நகைகளின் மதிப்பு சுமார் ₹13.45 லட்சம் என கூறப்படுகிறது.