குளித்தலை, மார்ச் 18: தினகரன் செய்தி எதிரொலியால் குளித்தலையில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் வரும் 28ம்தேதி நடக்கிறது. இதற்காக தண்ணீர் நிரப்புவதற்கு தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ரோட்டில் உள்ளது அய்யர்மலை கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் ஆண்டாண்டு காலமாக பங்குனி உத்திரத்தன்று அய்யர் மலையில் இருந்து உற்சவர் சாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த நடைமுறை பின்பற்றாமல் இருந்த நிலையில் பக்தர்கள் உபயதாரர்கள் பெருமுயற்சியால் கடந்த இரண்டு வருடங்களாக தெப்ப உற்சவம் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் ஆழ்குழாயிலிருந்து மோட்டார் மூலம் கொண்டுவரப் பட்டு தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலையில் வைக்கப் பட்டி இருக்கும் .அதில் பங்குனி உத்திரத்தன்று உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும் இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்குதலால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.