அரியலூர், மார்ச் 17: ஜெயங்கொண்டம் பகுதியில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் விதிகளை மீறிய 8 கடைகளுக்கு வட்டாட்சியர் அபராதம் விதித்தார். அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியப் போக்கும், திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள் திருவிழாக்களில் பங்கேற்பதில், பயணங்கள் மேற்கொள்வதில் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்வதும், பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும் கொரோனா தொற்றின் வேகத்தை அதிகரித்து வருகிறது எனவே அரியலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருப்பினும் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.